மெய்யுணர்தல்

திருக்குறள்:
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் 
சார்தரா சார்தரு நோய்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
துன்பங்கள் நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால்,
அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ள பற்றை
விலக்கிக் கொள்ள வேண்டும்.

மு.வ உரை:
எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.

சாலமன் பாப்பையா உரை:
எல்லாப் பொருள்களுக்கும் இடமாகிய மெய்ப்பொருளை உணர்ந்து
பற்றின்றி வாழ்ந்தால், பற்ற வரும் துன்பங்கள் ஒழுக்க உணர்வை அழி்த்துப்
பற்ற மாட்டா.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
சார்பு உணர்ந்து சார்புகெட ஒழுகின் - ஒருவன் எல்லாப்
பொருட்கும் சார்பாய அச்செம்பொருளை உணர்ந்து, இருவகைப் பற்றும் அற
ஒழுகவல்லனாயின்; சார்தரும் நோய் அழித்து மற்றுச் சார்தரா - அவனை முன்
சாரக்கடவனவாய் நின்ற துன்பங்கள் அவ்வுணர்வு ஒழுக்கங்களை அழித்துப் பின்
சாரமாட்டா. (ஆகு பெயரால் சாரும் இடத்தையும் சார்வனவற்றையும் 'சார்பு'
என்றார். 'ஈண்டு'ஒழுக்கம் என்றது யோகநெறி யொழுகுதலை. அஃது இயமம், நியமம்,
இருப்பு, உயிர் நிலை, மன ஒடுக்கம், தாரணை, தியானம், சமாதி என
எண்வகைப்படும். அவற்றின் பரப்பெல்லாம் ஈண்டுஉரைப்பின் பெருகும். யோக
நூல்களுள் காண்க. 'மற்றுச் சார்தரா' என இயையும். சாரக்கடவனவாய் நின்ற
துன்பங்களாவன: பிறப்பு அநாதியாய் வருதலின் உயிரான் அளவின்றி ஈட்டப்பட்ட
வினைகளின் பயன்களுள்இறந்த உடம்புகளான் அனுபவித்தனவும் 'பிறந்த
உடம்பான்முகந்து நின்றனவும் ஒழியப் பின்னும் அனுபவிக்கக்கடவனவாய்க்
கிடந்தன. அவை விளக்கின் முன் இருள்போல ஞானயோகங்களின் முன்னர்க் கெடுதலான்,
'அழித்துச்சார்தரா' என்றார். இதனை ஆருகதர் 'உவர்ப்பு' என்ப. பிறப்பிற்குக்
காரணம் ஆகலான்' நல்வினைப் பயனும் 'நோய்'எனப்பட்டது. மேல் மூன்று
உபாயத்தானும் பரம்பொருளைஉணரப் பிறப்பு அறும் என்றார். அஃது அறும்வழிக்
கிடந்ததுன்பங்கள் எல்லாம் என் செய்யும் என்னும் கடாவைஆசங்கித்து. அவை ஞான
யோகங்களின் முதிர்ச்சி உடையஉயிரைச் சாரமாட்டாமையானும், வேறு சார்பு
இன்மையானும் 'கெட்டு விடும்'என்பது இதனால் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
தன்னைச் சார்வனவற்றையறிந்து அவையிற்றின் சார்வுகெட
ஒழுகுவானாயின் அவ்வொழுக்கத்தினையழித்துச் சார்தலைச் செய்யா: சாரக்கடவனவாய
துன்பங்கள். சார்பு - வினைச்சார்பு. கெட ஒழுகல் - காமம், வெகுளி,
மயக்கமின்றி மெய்யுணர்ச்சியான் ஒழுகுதல். இஃது உண்மையைக் கண்டு
அக்காட்சியைத் தப்பாமல் முடிய நிற்பனாயின் சாரக்கடவதாய் நிற்கின்ற வினை
சாராதே விட்டுப் போமென்றது.

Translation:
The true 'support' who knows- rejects 'supports' he sought before-
Sorrow that clings all destroys, shall cling to him no more.

ADVERTISEMENTS
Explanation:
He who so
lives as to know Him who is the support of all things and abandon all
desire, will be freed from the evils which would otherwise cleave to him
and destroy (his efforts after absorption).