குறிப்பறிவுறுத்தல்

திருக்குறள்:
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி 
அஃதாண் டவள்செய் தது.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக்
கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற
முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்.

மு.வ உரை:
தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித்
தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய
அதுவேயாகும்.

சாலமன் பாப்பையா உரை:
நீ என்னைப் பிரிந்தால் இவை என்னுடன் இருக்கமாட்டா என்று கை
வளையல்களைப் பார்த்தாள். துணையாக தன் மெல்லிய தோள்களும் மெலியும் என
அவற்றைப் பார்த்தாள்; இவை இரண்டும் நடக்காதபடி நீர் நடந்து கொள்ள வேண்டும்
என்று தன் பாதங்களையும் பார்த்தாள், பிரிந்தால் நானும் உடன் வருவேன் என்ற
ஒரு குறிப்பும் இதனுள் இருக்கிறது.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற்கு அறிவித்தது.)
(யான் அது தெளிவித்த வழி தெளியாது) தொடி நோக்கி - அவர் பிரிய யான்
ஈண்டிருப்பின் இவை நில்லா எனத் தன் தொடியை நோக்கி; மென்தோளும் நோக்கி -
அதற்கு ஏதுவாக இவை மெலியும் எனத் தன் மென்தோள்களையும் நோக்கி; அடி நோக்கி -
பின் இவ்விரண்டும் நிகழாமல் நீர் நடந்து காத்தல் வேண்டும் எனத் தன்
அடியையும் நோக்கி; ஆண்டு அவள் செய்தது அஃது - அங்ஙனம் அவள் செய்த குறிப்பு
உடன் போக்காயிருந்தது. (செய்த குறிப்பு-செய்தற்கு ஏதுவாய குறிப்பு. 'அஃது'
என்றாள், 'செறிதொடி செய்திறந்த கள்ளம்' (குறள். 1275)என்றானாகலின்.
பிரிதற்குறிப்புண்டாயின், அஃது அழுங்குதல் பயன்.).

மணக்குடவர் உரை:
தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும்
நோக்கி, அவள் அவ்விடத்துச் சென்ற குறிப்பு அதுவாயிருந்தது. அது -
உடன்போக்கு.

Translation:
She viewed her tender arms, she viewed the armlets from them slid;
She viewed her feet: all this the lady did.

ADVERTISEMENTS
Explanation:
She looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there (significantly).