குறிப்பறிவுறுத்தல்

திருக்குறள்:
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை 
அணியில் திகழ்வதொன்று உண்டு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.

மு.வ உரை:
( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை:
கோக்கப்பட்ட பளிங்கிற்குள் கிடந்து வெளியே தெரியும் நூலைப் போல இவளின் அழகிற்குள் கிடந்து வெளியே தெரியும் குறிப்பு ஒன்று உண்டு.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) மணியில் திகழ்தரும் நூல்போல் - கோக்கப்பட்ட
பளிக்கு மணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாம் நூல் போல; மடந்தை அணியில்
திகழ்வது ஒன்று உண்டு - இம்மடந்தையது அணியகத்துக் கிடந்து புறத்துப்
புலனாகின்றதொரு குறிப்பு உண்டு. (அணி - புணர்ச்சியான் ஆய அழகு. அதனகத்துக்
கிடத்தலாவது, அதனோடு உடன் நிகழ்தற்பாலதன்றி வைத்து உடனிகழ்தல். 'அதனை
யான்அறிகின்றிலேன், நீ அறிந்து கூறல் வேண்டும்', என்பது கருத்து.).

மணக்குடவர் உரை:
கோவைப்பட்ட நீலமணியின்கண்ணே தோற்றுகின்ற நூல்போல,
இம்மடந்தை அழகினுள்ளே இவள் மறைக்கவும் தோற்றுகின்றதொரு துன்பம் உணடு. அழகு -
புணர்ச்சியால் வந்த அழகுபோலுமென்னும் குறிப்பு.

Translation:
As through the crystal beads is seen the thread on which they 're strung
So in her beauty gleams some thought cannot find a tongue.

ADVERTISEMENTS
Explanation:
There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems.