நிறையழிதல்

திருக்குறள்:
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் 
பேணியார் பெட்ப செயின்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு
விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம்
அறிவதில்லை.

மு.வ உரை:
நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச்
செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல்
இருப்போம்.

சாலமன் பாப்பையா உரை:
என்னால் விரும்பப்பட்டவர் காதல் ஆசையில் நான் விரும்பியதையே செய்தபோது, நாணம் என்று சொல்லப்படும் ஒன்றை அறியாமலேயே இருந்தேன்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு நிறையழிவாற் கூடிய
தலைமகள் 'நீ புலவாமைக்குக் காரணம் யாது?' என்ற தோழிக்குச் சொல்லியது.)
பேணியார் காமத்தாற் பெட்பசெயின் - நம்மால் விரும்பப்பட்டவர் வந்து
காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்யுமளவில்; நாண் என ஒன்றோ அறியலம் -
நாண் என்றொன்றையும் அறிய மாட்டேமாயிருந்தோம். ('பேணியார்' எனச்
செயப்படுபொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. விரும்பியன - வேட்கை
மிகலினாற் கருதியிருந்த கலவிகள். நாண் - பரத்தையர் தோய்ந்த மார்பைத்
தோய்தற்கு நாணுதல். 'ஒன்று' என்பது ஈண்டுச் 'சிறிது' என்னும் பொருட்டு.
இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. நிறையழிவான் அறியாது கூடிய தன்
குற்றம் நோக்கி, அவளையும் உளப்படுத்தாள்.).

மணக்குடவர் உரை:
நாணென்பதொன்று அறியார் மகளிர், காமம் காரணமாக
விரும்பப்பட்டவர் தாம் விரும்புமாறு செய்வாராயின். அவர் விரும்புமாறு
செய்வாராயின் நாணமுண்டாகா தென்றவாறு.

Translation:
No sense of shame my gladdened mind shall prove,
When he returns my longing heart to bless with love.

ADVERTISEMENTS
Explanation:
I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me).