செய்ந்நன்றி அறிதல்

திருக்குறள்:
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் 
வானகமும் ஆற்றல் அரிது.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
வாராது வந்த மாமணி ( என்பதுபோல், செய்யாமற் செய்த உதவி)
என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும்
கூட ஈடாக மாட்டா.

மு.வ உரை:
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு
செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும்
ஈடு ஆக முடியாது.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர்
நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும்
கொடுத்தாலும் சமம் ஆகாது.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
[அஃதாவது, தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை. இனியவை
கூறி இல்லறம் வழுவாதார்க்கு உய்திஇல் குற்றம் செய்ந்நன்றி கோறலேயாகலின் ,
அதனைப் பாதுகாத்துக் கடிதற் பொருட்டு, இஃது இனியவை கூறலின்பின்
வைக்கப்பட்டது. )

செய்யாமல் செய்த உதவிக்கு - தனக்கு முன் ஓர் உதவி செய்யாதிருக்க ஒருவன்
பிறனுக்குச் செய்த உதவிக்கு; வையகமும், வானகமும் ஆற்றல் அரிது - மண்ணுலகும்
விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது. (கைம்மாறுகள் எல்லாம்
காரணமுடையவாகலின், காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின. 'செய்யாமைச் செய்த
உதவி' என்று பாடம் ஓதி 'மறித்து உதவமாட்டாமையுள்ள இடத்துச் செய்த உதவி'
என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை:
முன்னோருதவி செய்யாதார்க்கு ஒருவன் செய்த வுதவிக்கு உலகமுஞ் சுவர்க்கமும் நிறையாற்றுத லரிது.

Translation:
Assistance given by those who ne'er received our aid,
Is debt by gift of heaven and earth but poorly paid.

ADVERTISEMENTS
Explanation:
(The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received.