புலவி நுணுக்கம்

திருக்குறள்:
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் 
காட்டிய சூடினீர் என்று.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து
கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர்
எனக்கூறி சினம் கொள்வாள்.

மு.வ உரை:
கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே மலர்ந்த பூவை
மாலையாக்கிச் சூடினேன். அதற்கு அவள், நீர் விரும்பும் எவளுக்கோ அடையாளம்
காட்டிச் சூடினீர் என்று சினந்து நின்றாள்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(தலைமகள் புலவிக் குறிப்பினைக் கண்டு, நீவிர் கூடியொழுகா
நிற்கவும் இது நிகழ்தற்குக் காரணம் யாது? என்ற தோழிக்குத் தலைமகன்
சொல்லியது.) கோட்டுப்பூச் சூடினும் - யான் கோடுதலைச்செய்யும் மாலையைச்
சூடினேனாயினும்; ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று காயும் -
நும்மாற்காதலிக்கப்பட்டாள் ஒருத்திக்கு இப்பூவணி காட்டல் வேண்டிச் சூடினீர்
என்று வெகுளாநிற்கும்; இத்தன்மையாட்கு ஒரு காரணம் வேண்டுமோ? ('கோடு'
என்பது முதனிலைத் தொழிற்பெயர். பூ - ஆகுபெயர், வளையமாகச் சூடினும்
என்பதாம்; 'கோட்டம் கண்ணியும் கொடுந்திரையாடையும்' (புறநா.275)என்றார்
பிறரும். இனி, 'அம்மருதநிலத்துப் பூவன்றி வேற்றுநிலத்துக் கோட்டுப்பூவைச்
சூடினேனாயினும், ஈண்டையாள், பிறளொருத்திக்கு அவ்வேற்றுப் பூவணிகாட்டல்
வேண்டிச் சூடினீர் என்று வெகுளும்', எனினும்அமையும்.).

மணக்குடவர் உரை:
பக்கப்பூச் சூடினும் ஒருத்திக்குக் காட்டுதற்காகச்
சூடினீரென்று சொல்லிக் காயும். பக்கப்பூ- ஒப்பனைப்பூ. கோட்டுப்பூ சூடினீர்
என்பதற்கு வளைப்பூச்சூடினீரெனினுமாம். இது கோலஞ்செய்யினும் குற்றமென்று
கூறியது.

Translation:
I wreathed with flowers one day my brow, The angry tempest lowers;
She cries, 'Pray, for what woman now Do you put on your flowers?'.

ADVERTISEMENTS
Explanation:
Even if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman.