புலவி நுணுக்கம்

திருக்குறள்:
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் 
நண்ணேன் பரத்தநின் மார்பு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன்.

மு.வ உரை:
பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம்
கண்களால் ‌பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன்
மார்பைப் பொருந்தேன்.

சாலமன் பாப்பையா உரை:
பெண் விரும்பியே! நீ வீதி வழி வரும் குணங்கெட்ட பெண்கள்
எல்லாரும் உன் மார்பைத் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால் அவர்களின்
எச்சிலாகிய உன் மார்பை நான் இனிச் சேரேன்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
[அது , ' புலவியது ' நுணுக்கம் என விரியும் .அஃதாவது ,
தலைமகனும் தலைமகளும் ஒர் அமளிக்கண் கூடியிருந்துழி அவன் மாட்டுப் புலத்தற்
காரண மில்லையாகவும் , காதல் கைம்மிகுதலான் நூண்ணியதோர் காரணமுளதாக
உட்கொண்டு , அதனை அவன்மேலேற்றி அவள் புலத்தல். காரணத்தின் நுணுக்கம்
காரியத்தின்மேல் நின்றது . அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]

(உலாப்போய் வந்த தலைமகன் பள்ளியிடத்தானாகத் தலைமகள் சொல்லியது.) பரத்த -
பரத்தைமையுடையாய்; பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர் - நின்னைப்
பெண் இயல்பினையுடையார் யாவரும் தம் கண்ணான் பொதுவாக உண்பர்; நின் மார்பு
நண்ணேன் - அதனால் அவர் மிச்சிலாய நின் மார்பினைப் பொருந்தேன். (கற்பு நாண்
முதலிய நற்குணங்களின்மையின் பரத்தையர்க்குள்ளது பெண் இயற்கை மாத்திரமே
என்னுங் கருத்தால், 'பெண் இயலார்' என்றாள். பொதுவாக உண்டல் - தஞ்சேரிச்
செலவின் முறையானன்றி ஒரு காலத்து ஒருங்கு நோக்குதல்; அதுவும் ஓர் குற்றம்.
தாம் நோக்கி இன்புற்றவாறே அவரும் நோக்கி இன்புறுவர் என ஆசங்கித்து அவர்பாற்
பொறாமை எய்துதலின், நுணுக்கமாயிற்று.).

மணக்குடவர் உரை:
என் புலவியைச் சாகவிட்டிருக்க வல்லாரோடு என்னெஞ்சு,
கூடுவேமென்று நினைக்கின்றது தன்னாசைப்பாட்டால். இத புலவி நீங்கவேண்டுமென்ற
தோழிக்குத் தலைமகள் புலவி தீர்வாளாய்ச் சொல்லியது.

Translation:
From thy regard all womankind Enjoys an equal grace;
O thou of wandering fickle mind, I shrink from thine embrace.

ADVERTISEMENTS
Explanation:
You are given
to prostitution; all those who are born as womankind enjoy you with
their eyes in an ordinary way. I will not embrace you.